காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில், சாலவாக்கம் சாலையில், பயணியர் நிழற்குடை இருந்தது. இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி அப்பகுதி வாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை சேதமடைந்து இருந்தது. இதனால், பயணியர் அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
எனவே, சேதமடைந்திருந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க, 2025 - 26ம் நிதி ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வாக சுந்தர் உள்ளார்.
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கிளக்காடி கிராமத்தில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.