கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை ஆலடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது 50), தொழிலாளி. இவருக்கு மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இவர் தினமும் வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் மது குடித்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பிரபுதாஸ் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் பிரபுதாஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று பிரபுதாஸ் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரபுதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிரபுதாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.