நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக சாலை செப்பனிடாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சாலை சீரமைக்க 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இதுவரையிலும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படவில்லை. அடிக்கடி குண்டு குழிகளில் மண் மற்றும் கற்கள் போட்டு நிரப்புவது வழக்கம். இந்நிலையில் இன்று 23-ம் தேதி படந்தாலுமூடு பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் பகுதியில் மண் மற்றும் ஜல்லி கற்கள் போட்டு நிரப்ப வந்த வாகனங்களை பொது மக்கள் தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி பல மாதங்கள் ஆகியும் முறையாக சாலையை சீரமைக்காமல், அடிக்கடி மண் மற்றும் கற்கள் போட்டு குண்டு குழிகளை நிரப்புவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே முறையாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி தற்காலிக பணிகள் மேற்கொள்ள வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.