வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (55). கூலித் தொழிலாளி. இவர் சம்பவ தினம் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஐயப்பன் சட்டைப் பைக்குள் இருந்து தென்னை மரத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்துப் பாட்டில் கீழே விழுந்தது. இதை அவரது குடும்பத்தினர் கவனித்தனர். உடனே ஐயப்பன் சட்டென்று பாட்டிலை எடுத்து வெளியே தூக்கி எறிந்து விட்டார். இது குறித்து அவரிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை.
இந்த நிலையில் அன்றைய நாள் இரவில் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் மதியம் திடீரென ஐயப்பனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டுக் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ஐயப்பன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஐயப்பனின் மனைவி சாந்தி என்பவர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐயப்பன் ஏற்கனவே தூக்கி எறிந்த மருந்துப் பாட்டிலை மீண்டும் எடுத்து அதிலிருந்த மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள்.