திருவட்டாறு: அரசு டாக்டர் வேலை வாங்கி தருவதாக மோசடி

திருவட்டாறு பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சோமன் நாயர்(58) மகள் சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். இவர் மருத்துவ பணியாளர் தேர்வை கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி எழுதியுள்ளார். சோமன் நாயருக்கு வேலூரை சேர்ந்த சதீஷ் என்பவர் பழக்கமாகி, மருத்துவர் வேலைக்கு ரூ. 7 லட்சம் தந்தால் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பி, லோகேஷ் குமார்(28) என்பவரின் வங்கிக்கணக்கில் 6 லட்சம் ரூபாய் சோமன் நாயர் அனுப்பியுள்ளார். ஆனால் தேர்வு முடிவில் மகளின் பெயர் வரவில்லை. உடனே சோமன் நாயர் பணத்தை கேட்டார். இந்த நிலையில் நேற்று சதீஷ் அனுப்பியதாக லோகேஷ்குமார் சமரசம் பேசுவதற்காக திருவட்டாறில் சோமன்நாயர் வீட்டிற்கு வந்தார். அப்போது தகராறு ஏற்பட்டதால், ஆட்கள் வரவே லோகேஷ்குமார் ஓடிவிட்டார். உடனே திருவட்டாறு போலீசில் சோமன் நாயர் புகாரளித்தார். போலீசார் பஸ் ஏறி நின்றிருந்த லோகேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.