கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவள்ளி, அருள்மிகு செளந்திர நாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக தெய்வத் திருமணம் செய்வது வழக்கம். அதனாலேயே கல்யாண பசுபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
அதேசமயம் ஆண்டுதோறும் கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்ட் தொடர்ந்து தெய்வ திருமண விழாவை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை 27 ஆவது ஆண்டாக தெய்வ திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். தெய்வத் திருமணத்தை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் விழா கோவில் வளாகத்தின் முன்பு நடைபெற்றது.
கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்டின் தலைவர் ஆனிலை. பாலகிருஷ்ணன் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிரஸ்டின் செயலாளர் எம்.ஏ. ஸ்காட் தங்கவேல், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நடும் விழாவை சிறப்பித்தனர்.