கரூர்: ரூ.7.95 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்

56பார்த்தது
கரூரில், ரூ. 7.95 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, நெரூர் வடக்கு, தெற்கு மற்றும் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 7.95 கோடி மதிப்பீட்டில் 23 புதிய திட்ட பணிகளை துவக்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிராம மக்கள் திரண்டுவந்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நெரூர் வடக்கு ஊராட்சி, ஒத்தக்கடை, அருந்ததியர் காலனி பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையினை திறந்து வைத்தார். 

இதே போல மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணியையும், அம்பல கவுண்டன் புதூர் காலனியில் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் மினி சமுதாயக்கூடம் அமைக்கும் பணியையும், சின்னகாளி பாளையம் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், பைப் லைன் விஸ்தரிக்கும் பணியையும் துவக்கி வைத்தார். இதேபோல மொத்தம் 23 இடங்களில் வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்புடைய செய்தி