மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெருவைச் சேர்ந்த பிச்சை மனைவி பாண்டியம்மாள் (60). நேற்று (ஜூலை 5) இரவு வீட்டில் இருந்தவரை, அவ்வழியே வந்த வெறிநாய் கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த நாயை துரத்தினர்.
அப்போது அதே தெருவைச் சேர்ந்த பாலா மகள் மோக்சிதா (6) என்ற சிறுமியையும் நாகராஜ் மகன் வீரக்குமார் (13), விஜயகுமார் மகன் தியானேஷ்(6), முருகன் மகன் கார்த்திக் (15), சித்தையா மகன் ரவி சங்கர் (55) மற்றும் மூதாட்டி அழகு (75) ஆகியோரையும் அதே நாய் அடுத்தடுத்து கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 7 பேரும் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். படுகாயமடைந்த பாண்டியம்மாள், மோக்சிதா ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.