மானாமதுரை வட்டம், ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த முருகவள்ளி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் கடந்த 2022-ஆம் ஆண்டு வயல் வெளியில் நடந்து சென்றார். அந்தப் பகுதியில், ஜேம்ஸ் என்பவர் தனது தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்திருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் எனது கணவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜேம்ஸ் மீது மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எனது கணவருக்காக உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மனு அளித்தேன்.
ஜேம்ஸ் என்பவரின் தோட்டத்தில் மின் வேலி அமைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, நிவாரணம் வழங்க முடியாது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மனுதாரருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 5 லட்சம் நிவாரண தொகையை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றார்.