மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் 400 குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என்றும் சாக்கடை தூர் வாராமல் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது என்று புகார் தெரிவித்தும் மதுரை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (டிச. 31) காலை பொதுமக்கள் காலி குடத்துடன் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அவனியாபுரம் காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பொறுப்பு உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.