திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி ஐயர் கோட்டப்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி உடனமர் சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நடந்து பல 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், தற்போது திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அக்கிராம மக்கள், மருளாளிகள் ஆகியோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மகா குடமுழுக்கு நடந்தது.
முன்னதாக குடமுழுக்கையொட்டி கடந்த 6-ந்தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி, லெட்சுமி, நவகிரக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து 7ஆம் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜை, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 11.30 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தன. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டன.
இதில் வேளாக்குறிச்சி 18வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.