பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட போலீஸார் நடத்திய விசாரணையில், அது பொத்தனூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (36) என்பதும், கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், ராஜவாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.