திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நான்காம் நாளான வியாழக்கிழமை ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கொடியேற்றப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேச பெருமாள், பரிவார தெய்வங்களுடன் திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளினர்.
மலையில் உள்ள மண்டபங்களில் வெவ்வேறு சமூகத்தவர்களின் மண்டபக் கட்டளைகள் நடந்து மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோயிலை வந்தடைந்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக உற்சவர்கள் வீதி உலா வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.