கூடலூர் தாலுகா தேவர்சோலை பஜாரில் உள்ள பஞ்சாயத்து காலனியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை தனியார் தேயிலை எஸ்டேட் வழியாக வந்து, கூடலூர்–வயநாடு சாலையை கடந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் பயத்தில் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். பின்னர் யானை மீண்டும் தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றது. சமீபகாலமாக காட்டு யானைகள் மற்றும் கரடிகள் போன்ற வனவிலங்குகள் பஜார் பகுதி வரை வருவது அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.