நீலகிரி: பூங்காக்களில் படப்பிடிப்பு எடுக்க இரண்டு மாதங்களுக்கு தடை

62பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்குவதால், பூங்காக்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படம் உள்ளிட்டவற்றை இந்த இரண்டு மாதங்களில் எடுக்க அனுமதி கிடையாது என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பூங்காக்களில் கோடை விழாக்கள் நடத்தப்படவுள்ளன, அதன்படி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13வது காய்கறி கண்காட்சியும், உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 16, 17, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் 6 நாட்கள் 127வது மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் 10, 11, 12 ஆகிய தேதிகளில் 20வது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் 65வது பழக்கண்காட்சியும், கூடலூரில் 11வது வாசனை திராவிய கண்காட்சி மே 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி 30, 31 மற்றும் ஜுன் 1ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளில் தோட்டக்கலைத்துறையினர் இறங்கியுள்ளதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை இந்த பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி