தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.
"இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்" என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு வாசித்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டினை குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் ஆக்குவோம் என மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.