பெரம்பலூர் ரோடு பகுதியில் உள்ள, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஜெயங்கொண்டம் கோட்ட மின்வாரிய தெற்கு பிரிவில் கடந்த 6ம் தேதி உயர் அழுத்த மின் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த கேங்மேன், பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் மின்விபத்தில் உயிரிழந்தார்.
கேங்மேனுக்கு உரிய பணிகளை தவிர்த்து உயர் அழுத்த மின் கம்பி பாதையில் பணியமர்த்தியதாலும், மேற்பார்வையாளர்கள் உடன் இல்லாமல் பணி செய்ய வைத்ததாலும் ராஜாராம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜாராம் மரணத்திற்கு நீதி கேட்டு, மின்வாரிய பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் முறையிட்ட போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்திற்கு தொடர்பே இல்லாத சிலர் மீது நடவடிக்கை என்ற பெயரில் பணியிடை நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் மின்வாரிய உயர் அதிகாரிகள் செயல்படுவதாகவும், ராஜாராம் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவரது குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், திருச்சி மண்டல செயலாளர் அகஸ்தின் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்