பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெரம்பலூர் அரியலூர் சாலையில் நான்கு ரோடு பகுதி அருகே வந்தபோது, எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராமல் மோதியது.
இதில் கருணாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் திருச்சிக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.