ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கும் கடற்கரைப்பகுதி மின் கம்பங்கள்

58பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம் மற்றும் காரைக்கால் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை உள்ளடக்கியது. தினந்தோறும் காரைக்கால் கடற்கரைக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்படி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகம் பயன்படுத்தும் சுற்றுலாத்தலமான காரைக்கால் கடற்கரை பகுதிகளில் உள்ள மின் கம்பங்களுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இது சரியாக பராமரிக்காத காரணத்தால் அங்குள்ள மின்கம்பங்களில் மின் ஒயர்கள் பாதுகாப்பற்ற முறையில் வெளியில் தெரியும் படி உள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளோ, சிறுவர்களோ யாரேனும் அதன் மேல் கை வைத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கடற்கரைக்கு சென்ற நபர் ஒருவர் அந்த மின் கட்டத்தின் அருகே நின்ற போது தவறுதலாக கை அந்த மின்கம்பத்தின் மேல் பட்டதில் அவருக்கு ஷாக் அடித்துள்ளது.

எலக்ட்ரீசியனான அவர் தனது கையில் இருந்த டெஸ்டரை கொண்டு அந்த மின் கம்பத்தின் மேல் வைத்து அதில் மின்கசிவு ஏற்படுவதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை பதிவிட்டு வருகிறார். எனவே மின்துறை அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் வெளியில் தொங்கும் மின் ஒயர்களை சரி செய்து கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி