சேலம் மாவட்டம் எடப்பாடி சின்னமணலி அருகே லண்டன் மிஷன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர், எடப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தூய்மை பணியாளராக உள்ளார். இவருடைய மனைவி நஞ்சுண்டேஸ்வரி (வயது 54), கூலி வேலை செய்து வருகிறார். இவர், ஈரோடு செல்வதற்காக எடப்பாடியில் பஸ்சில் ஏறிய போது ஒரு பை அனாதையாக கிடந்தது.
அதை எடுத்து பார்த்த போது அதில் தங்க சங்கிலி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டேஸ்வரி, அதனை எடப்பாடி போலீசில் ஒப்படைத்து நடந்தவைகளை கூறினார். உடனே போலீசார், நஞ்சுண்டேஸ்வரியின் நேர்மையை பாராட்டினர். அந்த நகை குறித்து விசாரித்த போது, ஓமலூர் அருகே காமலாபுரம் தாத்தையான்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி சுகன்யா (33) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த நகையின் எடை 6 பவுன் என்பதும் தெரிய வந்தது. மேலும் திருமண விழாவுக்கு சென்ற போது பஸ்சில் நகையை தவறவிட்டது தெரிய வந்தது.
உடனே சுகன்யாவை வரவழைத்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் ஒப்படைத்தனர். பஸ்சில் கிடந்த நகையை ஒப்படைத்த நஞ்சண்டேஸ்வரியின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.