சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி மல்லிகா (வயது 35). இவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. அவர், கிணற்றுக்குள் அலறியபடி தண்ணீரில் தத்தளித்தார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த மல்லிகாவை மீட்டனர். பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.