காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை மறுநாள் (ஜூன் 12) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி மேட்டூர் நகராட்சி, வீரக்கல்புதூர் பேரூராட்சி, பி.என்.பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணி நடந்துவருகிறது. சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள புதர்கள், மரம், செடி, கொடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
நாளை (ஜூன் 11) இரவு மேட்டூர் நீர்வளத்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் முதல்வர் தங்குகிறார். இதனால் நீர்வளத்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணி நடந்தது. நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையிலும் பராமரிப்புப் பணி நடந்தது. மேட்டூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலைகளில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மேட்டூர் அணை வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இதனால் அணை புதுப்பொலிவு பெற்றுவருகிறது. நீண்ட நாட்களாக மேட்டூர் பகுதியில் அகற்றப்படாமல் இருந்த குப்பைகள், சாலையோர செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருவதால் மேட்டூர் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.