சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஓலைப்பட்டியை சேர்ந்தவர் பொம்மநாயக்கர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ரம்யா (வயது 17) என்ற மகளும் இருந்தனர். இவர்களில் ரம்யா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே தலையில் நீர் கோர்த்துக்கொண்டு அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 25) இரவு பெற்றோரிடம் தலைவலி, வயிற்றுவலி அதிகமாக உள்ளதாக கூறி மாணவி அழுதுள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறி அவரை தூங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் யாரோ குதிப்பது போன்று சத்தம் கேட்டு ரம்யாவின் பெற்றோர் திடுக்கிட்டு விழித்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தூங்கிக்கொண்டிருந்த மகளை காணவில்லை.
இதையடுத்து கிணற்றுக்கு சென்று பார்த்த அவரது பெற்றோர், மகள் கிணற்றுக்குள் குதித்து மூழ்கி இருந்ததை உறுதி செய்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மாணவியை மீட்ட போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மேச்சேரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.