சேலம் மாவட்டம் மேட்டூர் ஆஸ்பத்திரி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் திரவியம் (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி சேலத்தில் வசித்து வருகிறார். இதனால் ஜோசப் திரவியம் மேட்டூரில் உள்ள தனது தங்கை அந்தோணி மேரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 29-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே முட்புதரில் ஜோசப் திரவியம் மயங்கி கிடைப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ஜோசப் திரவியம் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.