சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகில் கோட்டேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க வையாபுரி என்பவர் படகு வைத்திருந்தார். நேற்று தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்த கவின்குமார் (வயது 35), அவருடைய நண்பர்கள் முருகன் (37), அண்ணாதுரை (45) ஆகிய 3 பேரும் வையாபுரி படகை எடுத்துக்கொண்டு மீன்பிடிப்பதாக கூறி கோட்டேரி ஏரிக்குள் சென்றனர். ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். 3 பேரும் ஏரியில் இருந்த மணல் திட்டில் நின்று 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று சத்தம் போட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் தத்தளித்தவர்களை மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவின்குமார் ஊட்டி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசாரராக பணிபுரிந்து வந்ததும், தற்போது விடுப்பில் ஊருக்கு வந்திருந்ததும், அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு படகை எடுத்துக்கொண்டு ஏரிக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.