சேலம் மாவட்டத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக ஓமலூரில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர், உணவை தரமாக சமைப்பது எப்படி? தரமான மூலப்பொருட்கள் வாங்குவது, சமைத்த பொருட்களை பாதுகாப்பாக சேமிப்பது, பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்துவது, பூச்சி தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளை சேர்ந்த 282 சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து எடப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி, கெங்கவல்லி, தலைவாசல், தாரமங்கலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.