சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள பாலநிகேதன் மழலையர் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள், காலநிலை மாற்றம், காற்று மாசு, வேதியியல் மாற்றம், சூரிய குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் தங்களது செய்முறைகளை காட்சிப்படுத்தி திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அறிவியல் கண்காட்சியை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
மேலும், அறிவியல் படைப்புகளை வைத்திருந்த மழலையர் குழந்தைகள், செய்முறை தொடர்பான விளக்கங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், டாக்டர் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியில் சிறந்த செய்முறை படைப்புகளை வைத்து அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர், மழலையர் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் திறமைகளை நல்லமுறையில் வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.