சேலம் டவுன் ஜலால்புறா தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று ஜலால்புறா தெருவில் சுகேல் (வயது 30) என்பவரது மளிகை கடையில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது, கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்து ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 775 மதிப்புள்ள 40 கிலோ குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சுகேலை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சேலம் அழகாபுரம் ரோகிணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (46). இவர், பேர்லேண்ட்ஸ் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அழகாபுரம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த 6 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். மொத்தம் 2 மளிகை கடைகளிலும் 46 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.