கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய எல். எச். பி. பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
கோவையில் இருந்து ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக திருப்பதிக்கு வாரத்தில் 4 நாட்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதே போல திருப்பதியில் இருந்து கோவைக்கு மறுமார்க்கத்தில், திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் சேவையை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலின் அனைத்து பெட்டிகளும் அதிநவீன வசதிகள் கொண்ட எல். எச். பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெட்டிகளில் உயர்ரக குளிர்சாதன வசதிகள், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் நீண்ட தூரம் பயணித்தாலும் சலிப்பு தட்டாமல் இருக்கைகள் பராமரிப்பு மற்றும் டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ரெயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று முதல் எல். எச். பி. கொண்ட பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.