சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை சக்தி அழைப்பு நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நேற்று காலை (மார்ச் 26) பொங்கல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதனையடுத்து இன்று (மார்ச் 27) காலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து இன்று மாலை தீமிதி விழா நடந்தது. அப்போது சாமியை தூக்கிவந்த பூசாரி அக்னிக் குண்டத்தில் சாமியுடன் தவறி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அக்னிக் குண்டத்தில் சுவாமி தவறி விழுந்தது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.