சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் சந்தன மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அங்கிருந்த 2 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு மரத்துண்டுகள் அங்கு கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தன மரங்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர்.
இதனிடையே அதில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி கரையோரத்திலும் சந்தனமரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சென்று போலீசார் பார்த்தனர். அப்போது ஜங்ஷன் ரெயில் நிலையம் பின்புறம் பகுதியில் வெட்டப்பட்ட சந்தன மரத்தின் துண்டுகளை மர்ம நபர்கள் ஏரிக்கு எடுத்து சென்று உள்ளனர். பின்னர் அங்கு வைத்து மரத்துண்டுகளை செதுக்கி அதன்பிறகு கடத்தி சென்று உள்ளனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் சுமார் 250 கிலோ வரை சந்தன மரக்கட்டைகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.