சேலம்: சிறுமி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

539பார்த்தது
சேலம்: சிறுமி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த குருக்கப்பட்டி அருகே உள்ள கொன்னேரிவளவு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் சிவகுமார் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பழனிசாமி மகன் பிரபு (19), ராஜி மகன் தாமரைசெல்வன் (20), பழனிசாமி மகன் வேடப்பன் (40). இவர்கள் 4 பேரும் தொழிலாளர்கள். 

இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் இட்லி வாங்கி தருவதாக கூறி அங்கு உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 

அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளர்கள் சிவகுமார், பிரபு, தாமரைசெல்வன், வேடப்பன் ஆகிய 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். மேலும் 4 பேரும் இரட்டை ஆயுள் தண்டனையை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி