சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரபள்ளி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதனை வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார் ஆகியோர் நேற்று (ஜூன் 11) அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 41) என்பவரது வீட்டில் அதிகளவு சிலிண்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி அரசு அனுமதியின்றி வர்த்தக பயன்பாட்டுக்கு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.120 வரை விற்பனை செய்துள்ளார். மேலும் பெருமாள், பாதுகாப்பு வசதி இல்லாமல் கியாசை மற்றொரு சிலிண்டருக்கு எந்திரம் மூலம் நிரப்பியதும் தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 43 கியாஸ் சிலிண்டர்கள், 2 கியாஸ் நிரப்பும் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.