சங்ககிரி அருகே வைகுந்தம் மற்றும் காளிப்பட்டி பிரிவு பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற 6 தனியார் பஸ்களை பொதுமக்கள் நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பஸ் நிறுத்தங்களில் அனைத்து நேரங்களிலும் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் வெடித்தது. சங்ககிரி எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்கள் நின்று செல்ல உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.