சேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

80பார்த்தது
சேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 30). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி லாவண்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே ஹரிதாஸ் கடன் தொல்லையால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த குடும்பத்தகராறில் ஹரிதாஸ், மனைவி லாவண்யாவிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். 

இதனால் மனமுடைந்த லாவண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஹரிதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது லாவண்யா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.