சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவர் சொந்தமாக தறிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமான வீட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் வாடகைக்கு தங்கி அப்பகுதியில் விசைத்தறி சம்பந்தமான வேலை செய்து வந்தனர். கடந்த 23-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரும் மது குடித்து விட்டு போதையில் அதிகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். இதை வீட்டின் உரிமையாளர் கோவிந்தராஜ் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். அப்போது கோவிந்தராஜை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேலசிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பீகார் பாட்னா நாளந்தா பாத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (21), சங்கர்பிந்த் (25), சைதன்பூரைச் சேர்ந்த குந்தன்குமார் (19), அஜய் பிந்த் (21), நாராயண்பூரைச் சேர்ந்த லவ்குமார் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.