சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். தறிப்பட்டறை உரிமையாளர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 43). இவர்களது மகன் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவன் கேரள மாநிலம் மூணாருக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது விபத்தில் இறந்தான். மகன் இறந்ததால் பாக்கியலட்சுமி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது பாக்கியலட்சுமி வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.