தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இளநீர், தர்பூசணி மற்றும் ஜூஸ் கடைகளை மக்கள் அதிகம் நாடிச் செல்கின்றனர். இதற்கிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ஈரோடு மற்றும் வேலூரில் 106 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.