தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன்(58). தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த இவர், 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த நண்பர் வீட்டிற்குச் சென்ற போது, அங்கு தனியாக இருந்த நண்பரின் மகளுக்கு (15) பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், விசாரணை தாமதப்பட்டதால், மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். எனினும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதைதொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதியின் உத்தரவின் பேரில் மகளிர் போலீசார் நீலகண்டனைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஆலங்குளம் தனிப்படை போலீசார் மும்பையில் பதுங்கி இருந்த அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.