தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மடத்துப்பட்டியில் உரிய கல்வி தகுதியின்றி ஆங்கில மருத்துவம் செய்தவரின் மருந்துக் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
மடத்துப்பட்டியில் கிரேஸ் மருந்தகத்தில் ராமலட்சுமி என்பவர் உரிய கல்வித் தகுதி இல்லாமல் போலியாக மருத்துவம் செய்து வருவதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து புகார் வந்ததாம். இதையடுத்து, தென்காசி மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா கடந்த 11ஆம் தேதி மருந்துக் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மருந்து கடைக்குள் ஆங்கில மருந்துகள் இருந்தனவாம். அதற்கான மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லையாம்.மேலும், பொதுமக்களுக்கு டிடி ஊசி மற்றும் இன்சுலின் ஊசி போடுவதாக அவர் ஒப்புக் கொண்டாராம்.இதைத் தொடர்ந்து மருந்து கடையை தற்காலிகமாக மூட இணை இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் உடையார்சாமி முன்னிலையில் வருவாய் துறையினர் அந்தக் கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, ராமலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.