தஞ்சை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்பனை செய்வதை தடுக்க ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணா சிலை, ரயில்வே நிலையம், கீழவாசல் பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று (மார்ச் 15) அதிரடி சோதனையை நடத்தினர்.
மொத்தம் 163 கடைகளில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த மற்றும் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த மற்றும் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். இப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்