தமிழ்நாடு சர்க்கரை கழகம் 49வது பேரவைக் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சர்க்கரை கழக சர்க்கரைத் துறை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர்.
இதில் காவிரி டெல்டா விவசாய சங்கத் தலைவர் ரவிசுந்தர் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள, நோய் தாக்காத புதிய ரகக் கரும்பு விதையை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும். கரும்பு வெட்டுத் தொகையை விவசாயிகள் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வருவது போல் கரும்பு விவசாயி ஆலையில் கரும்புகளைக் கொடுக்கும்போது எவ்வளவு எடை கரும்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் எடை மோசடி செய்வதைத் தவிர்க்கலாம். கரும்பு விவசாயிகளுக்கு எந்திரங்களை 50% மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.