தஞ்சை: முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் - ஆட்சியர்

61பார்த்தது
தஞ்சை: முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் - ஆட்சியர்
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது. 

கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு ஜூன் 2-ஆம் தேதி துவங்கி வருகிற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு நேரில் வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்பு பணி சிறப்பாக நடைபெற உதவிட வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி