தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் இந்துக்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சந்தன மகோற்சவம் கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பாத்திகாக்கள் ஓதப்பட்டு வந்தது. இன்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை காமராஜர் மார்க்கெட் தலைமை காய்கனி வர்த்தக சங்கம் தலைமையில் இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து இந்த மத நல்லிணக்க விழாவை நடத்தி வருகின்றனர். வழக்கமாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு ஊர்வலம் நடைபெறவில்லை. தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.