திருவையாறில் வைக்கோல் கட்டுகளுக்கு நடுவே மறைத்து கடத்தி வரப்பட்ட 440 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து பொலிரோ வாகனத்தில் இந்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவையாறு தேரடி சந்திப்பில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடத்தலில் ஈடுபட்ட தில்லைஸ்தானத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) மற்றும் புனல்வாசலைச் சேர்ந்த பாண்டியன் (38) ஆகிய இருவரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அவர்களை திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.