தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் தி.மு.க பிரமுகர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க சாலையோரம் இரும்பு கொடிக்கம்பம் நடப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த கோகுல் (29) மற்றும் கார்த்தி (45) ஆகிய தொழிலாளர்கள் 30 அடி உயர கொடிக்கம்பத்தை நடும்போது, அது மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தமிழ் பல்கலைக்கழகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.