தேனி மாவட்டம் கீழக்கூடலூர் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரது மனைவி சரஸ்வதி இவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இன்று அவர் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அருகே அமைந்துள்ள அழகேசன் என்பவரது தென்னந்தோப்பில் வேலை செய்து விட்டு மாலை வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்த யானை திடீரென சரஸ்வதி மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமுளி போலீசார் மற்றும் வனத்துறையினர் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கூடலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் மோதல் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் உடனடியாக வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குமுளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய கூலி வேலைக்குச் சென்ற பெண் காட்டு யானை தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.