திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஐயா பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனம். இவரது கணவர் செல்வகுமார் பெயிண்டர். தனம் அக்கா மகள் செல்வி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை பேஸ்புக் மூலம் பழகி 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் திருமணமாகி திருப்பூர் சென்றனர். மறுநாளே செல்வி காளிமுத்து தன்னைச் சந்தேகப்படுவதாக கூறி திருவொற்றியூருக்கு வந்து பெற்றோரிடம் கூறி இனி காளிமுத்துடன் வாழ மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். செல்வியைச் சமரசம் செய்து அழைத்துச் செல்ல காளிமுத்துவின் குடும்பத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகும் செல்வி சம்மதிக்காததால் 11 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த காளிமுத்து கடந்த மூன்று நாட்களாக செல்வியின் வீட்டு அருகே மாஸ்க் அணிந்து கொண்டு சுற்றி இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 5 மணி அளவில் செல்வி வசிக்கக்கூடிய வீட்டு அருகில் காளிமுத்து நின்று கொண்டிருந்ததைப் பார்த்த தனம் எதற்காக இங்கு வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மனைவி செல்வியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த காளிமுத்து தடையாக இருந்த செல்வியின் சித்தி தனத்தைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.