பூந்தமல்லி அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தாரணி கொளப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று (ஜூன் 3) மாலை ராஜேஸ்வரி வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாரணி தூக்குப் போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துவிட்டு மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த தாரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாரணி 11ம் வகுப்பு தேர்வில் 2 பாடப்பிரிவில் தேர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாகவும் தான் மட்டும் தேர்ச்சி பெறவில்லை என இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். 11ஆம் வகுப்பில் இரண்டு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.