திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் சின்னநாகப்பூண்டி காலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கவியரசு(11). இவர் ஆர்.கே. பேட்டை அடுத்த எரும்பி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை 5 மணி அளவில் ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது சிறிது தூரம் சென்ற நிலையில் ஆட்டோ ஓட்டுனர் அருகே இடது பக்கம் அமர்ந்திருந்த மாணவர் கவியரசு தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சக்கரம் ஏறியதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் முனிராஜ் (45) சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் கவியரசு உயிரிழந்தார்.
இதுகுறித்து மாணவன் கவியரசுவின் தந்தை சரவணன் ஆர்.கே. பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பயிற்சி இன்ஸ்பெக்டர் ஆகாஷ் குமார் வழக்குப் பதிவு செய்து டிரைவர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.